Thursday, November 17, 2011

எச்சரிக்கை - உங்கள் பேஸ்புக்கை கண்காணிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேலிய அரசுக்கு எதிரான சர்வதேச ஆர்வலர்களின் நடவடிக்கைகள் பெருகி வருகின்றன. இஸ்ரேலிய அரசு அவர்களை நாட்டிற்குள் வர விடாது தடுத்து வருகின்றது. பாலஸ்தீன ஆதரவாளர்களை இனங் காண்பதற்காக, முகப்புத்தகம் (Facebook) போன்ற சமூக வலைப் பின்னல்களை பயன்படுத்தி வருகின்றது. முகநூலில், இஸ்ரேலிய அரச உளவாளிகள் போலி அடையாளத்துடன் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போன்று உலா வருகின்றனர்.

சர்வதேச மட்டத்தில் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான நபர்களை இனங்காண்பதும், விபரங்களை தொகுப்பதும் அவர்களது வேலை. அண்மையில் பாலஸ்தீன பிரதேசத்தில் இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு, முகநூலில் குழுமங்கள் உருவாக்கப்பட்டன. பல உலகநாடுகளில் இருந்து, பல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தனர். அவர்களது பெயர் விபரங்கள் யாவும் இஸ்ரேலிய அரசின் வசம் சென்றுள்ளன. ஏற்கனவே இஸ்ரேலிய அரசிடம் உள்ள, “விரும்பத் தகாத நபர்களின்” பட்டியலில் அந்த விபரங்கள் சேர்க்கப்பட்டன. இவ்வாறு 300 க்கும் அதிகமான சர்வதேச ஆர்வலர்களின் பெயர்கள், “கறுப்புப் பட்டியலில்” உள்ளன.

சமீபத்தில் இந்தப் பட்டியலில் உள்ள 65 நபர்கள் டெல் அவிவ் விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது, திருப்பி அனுப்பப்பட்டனர். பிற “சந்தேக நபர்கள்” பற்றிய விபரங்கள், இஸ்ரேலுக்கு வரும் விமான நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. அந்த நபர்களை கொண்டு வரும் விமானங்களுக்கு தண்டப் பணம் அறவிடப்படும் என எச்சரிக்கப் பட்டுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில், இஸ்ரேலுக்கு செல்லவிருந்த பயணிகள் பலர் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளனர். இஸ்ரேலிய அரசின் வற்புறுத்தல் காரணமாகவே, தாம் அந்த நடவடிக்கை எடுத்தாக விமான நிறுவன முகாமையாளர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேலிய அரசின் கடும்போக்குக் காரணமாக, மேற்கத்திய நாடுகளில் அதிருப்தியாளர்கள் பெருகி வருகின்றனர். சர்வதேச மட்டத்தில் இஸ்ரேலிய உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டம் நடந்து வருகின்றது. இதனால் கலக்கமடைந்த இஸ்ரேலிய அரசு, “பகிஸ்கரிப்பு எதிர்ப்பு சட்டத்தை” கொண்டுவந்துள்ளது. இஸ்ரேலிய இடதுசாரிகளால் “பாசிசமயமாக்கல்” என்று விமர்சிக்கப்பட்ட சட்டம், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் (கினேசெட்), பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் பிரகாரம், பகிஷ்கரிப்பால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலிய நிறுவனம் நஷ்டஈடு கோரலாம். வெளிநாடுகளில் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் அமைப்பிடமோ, அல்லது தனிநபரிடமோ நஷ்டஈட்டை அறவிடலாம். இஸ்ரேலின் பாசிச சட்டத்திற்கு, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. ஜனநாயக உலகில், அடிப்படை கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் என்று விமர்சித்துள்ளன.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.