
சீன அரசின் உதவியுடன் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நெலும் பொகுன எனும் தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கு நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. சீனாவின் பிரதிப் பிரதமர் தலைமையிலான சீனத் தூதுக் குழுவொன்றும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டது.
இலங்கையில் இவ்வாறானதொரு கலையரங்கம் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். 3.08பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கலையரங்கு சகல வசதிகளும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணப்பணிக்கு சீன அரசாங்கத்தினால் 2430 மில்லியன் ரூபாவும் ஏனைய நிதி நிறுவனங்கள் மூலம் 650 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் அண்டு இக்கட்டிடம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அதே வருடம் நவம்பர் மாதம் 11ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஜுலை மாதம் இதன் வேலைகள் யாவும் பூர்த்தியடைந்த நிலையில் நேற்று ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இங்கு உரை நிகழ்த்திய ஜனாதிபதி இலங்கை மக்களின் கண்ணீர் யுகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிபிட்டார்.