புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை இலங்கை முஸ்லிம்கள் 5800 பேருக்கு
சவூதி அரேபிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. முதலாவது ஹஜ் குழு
எதிர்வரும் 17ஆம் திகதி இங்கிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதென இஸ்லாமிய
கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம். நபவி தெரிவித்தார். இதற்கான
ஏற்பாடுகளை இலங்கை ஹஜ் விவகாரக் குழ மேற்கொண்டு வருகிறது.
முதலாவது ஹஜ் குழுவில் செல்பவர்களைக் கட்டுநாயக்கா விமான நிலையத்தில்
வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் ஹஜ் குழுவின் தலைவர்கள் மற்றும் திணைக்கள
அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமைக்காகச்
செல்லும் ஹாஜிகளின் நலன் கருதி வைத்தியர் குழுக்களும் சவூதி அரேபியா செல்ல
உள்ளது. இந்த வைத்தியக் குழுக்கள் மக்கா, மினா, அரபா, முஸ்தலிபா போன்ற
இடங்களில் தமது சேவைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.