Saturday, January 14, 2012

ஏ.எல். பரீட்சை - நிபுணர் குழுவின் அறிக்கையை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டது

2011ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுடன் தொடர்புடை பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது. பெறுபேறுகள் தொடர்பாக ஏற்பட்ட தவறுகளை குறுகிய காலத்திற்குள் பரீட்சைகள் திணைக்களம் திருத்தியுள்ளமை தமது நிலைப்பாடென குறித்த குழுவினர் அறிவித்துள்ளனர்.
பரீ்ட்சைப் பெறுபேறுகளை கணிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையின் போதே மாவட்ட தரப்படுத்தல் தொடர்பான குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
திருத்தம் மேற்கொள்ளப்பட்ட, மாவட்ட தரப்படுத்தலுடன் கூடிய பரீட்சைப் பெறுபேறுகள் தவறுகளின்றி உரிய முறையில் வெளியிடப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குளறுபடிகளுக்கு காரணமான விடயங்களை நீக்குவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் போதுமானளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பரீட்சார்த்திகள் தமது பிரச்சினைகளை சமர்ப்பிக்குமாறு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட செய்திகளுக்கு அமைய கிடைத்த மேன்முறையீடுகளை விசாரணை செய்தபோது பெறுபேறுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தொடர்பான தகவல்கள் ஆதாரங்களுடன் நிரூபனமாகவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எதிர்காலத்தில் பல்கலைக்கழக அனுமதிக்கான அறிவித்தலை விடுக்கும் போது அதிகளவிலான புத்திஜீவிகளிடம் தகவல்களை பெற்றுக்கொள்ள பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டுமென நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இதனைத் தவிர இத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக பரீட்சைகள் திணைக்களம் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளையும் ஜனாதிபதி நிபுணர்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் பரீட்சைகள் திணைக்களம் தமது தொழிநுட்ப பிரிவுக்காக முழுநேர தொழிநுட்ப ஆலோசகரின் சேவையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த பரீட்சை நடவடிக்கையின் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தற்கால ஆய்வொன்றை துரித கதியில் மேற்கொள்வதன் மூலம் ஏற்பட்டுள்ள தவறுகள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கு உடனடியாக ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் தாரா விஜதிலக்க தலைமையிலான நிபுணர் குழுவில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் க்ஷனிக்கா ஹிரிம்புரேகம, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்த்தன, ஊவ வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரஞ்ஜித் பிறேமலால் டி சில்வா, றோயல் கல்லூரியின் அதிபர் உபாலி குணசேகர ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.