நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறீஸ் பூதம் -கிறீஸ்
யக்கா- என்ற மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள்
தெரிவிக்கின்றது. இந்த மர்ம மனிதர்கள் பற்றிய பல கதைகள் கூறப்படுகின்றது.
அவற்றில் அரசியல் பின்னணியுடனும், மத பின்னணியுடனும் கதைகள்
உலாவருகின்றது.
இன்னும் ஊடகங்கள் குறிப்பாக சிங்கள மொழி ஊடகங்கள் கிறீஸ் பூதம் -கிறீஸ்
யக்கா- வார்த்தைகளின் ஊடாக கொடுத்த முக்கியத்துவம் நாட்டின் பல
பாகங்களிலும் உள்ள சமூக விரோத கும்பல்களை இவ்வாறான மர்ம மனிதர்களாக நடமாட
ஊக்குவித்துள்ளது என்றும் கூறலாம். தினமும் இடம்பெறும் சாதாரன் சமூக விரோத
நடவடிக்கைகள் அனைத்தும் இப்போது கிறீஸ் பூதங்களின் மர்ம நடவடிக்கையாக
பார்க்கபடுகின்றது. ஆனாலும் நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்
கிறீஸ் பூதம் என சந்தேகிக்கப்படும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணம் ஹட்டன் பிரதேசத்தில் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- என
சந்தேகிக்கப்படும் ஒரு குழு தலைமறைவாக இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலை
அடுத்து பதுளை மற்றும் ராகலை பகுதிகளில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கல்கினை, அலவத்துகொட, அப்புத்தளை, தம்பேதன்னை பண்டாரவளை,
வெலிமடை, பதுளை, பசறை, கொட்டகலை மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில்
மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக தெரிவித்து பலர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் வரிப்பத்தான்சேனை, இறக்காமம்,
ஒலுவில், அக்கரைப்பற்று மற்றும் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில்
இத்தகைய மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக பொதுமக்கள்
தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மர்ம மனிதன் என்று
சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இறக்காமம் பிரதேசத்தில் பொதுமக்களினால்
பிடிக்கப்பட்டு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னணி மற்றும் உண்மைத்தன்மை பற்றி எதுவும் தற்போது
கூறமுடியாவிட்டாலும் சமூகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள்
என்று சந்தேகிக்க படுபவர்கள் பலர் பொதுமக்களினால் கண்காணிக்கப் படுவதுடன்
பலர் கைதாகியும் உள்ளனர். தற்போது இந்த கிறீஸ் பூதம் கதை அனுராதபுரம்,
புத்தளம் ஆகிய பிரதேசங்களின் பின்தங்கிய கிராமங்களிலும் பேசப்படுகின்றது .
No comments:
Post a Comment